2018-07-03 14:44:00

இமயமாகும் இளமை – தங்களைத் தாமே சுயமாக ஆள விழைவோருக்கு...


ஒவ்வோர் ஆண்டும், ஜூலை 4ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டில் சுதந்திர நாள் கொண்டாடப்படுகிறது. பிரிட்டன், மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து வட அமெரிக்கக் கண்டத்தில் குடியேறிய மக்கள், பிரித்தானிய அரசுக்கு வரி செலுத்தவோ, அந்நாட்டின் அதிகாரத்திற்கு அடிபணியவோ மறுத்து, உருவாக்கிய ஒரு சுதந்திர அறிக்கை, 1776ம் ஆண்டு, ஜூலை 4ம் தேதி வெளியிடப்பட்டது. இதுவே, இவ்விழாவின் அடிப்படை காரணமாக அமைந்தது. இவ்வறிக்கையை உருவாக்கிய குழுவின் தலைவராகப் பணியாற்றிய தாமஸ் ஜெப்பர்சன் (Thomas Jefferson) அவர்கள், 33 வயது நிறைந்த இளைஞர். இவர் பின்னர், அந்நாட்டின் 3வது அரசுத் தலைவராகவும் பணியாற்றினார்.

1826ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி, சுதந்திர நாளின் 50ம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்ள ஜெப்பர்சன் அவர்களுக்கு அழைப்பு வந்தது. 83 வயது நிறைந்த ஜெப்பர்சன் அவர்கள், அவ்வேளையில் நோயுற்றிருந்ததால், தன்னால் அவ்விழாவில் பங்கேற்க இயலாது என்பதை ஒரு மடல் வழியே கூறியிருந்தார். அம்மடலில், அமெரிக்க ஐக்கிய நாடு எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை ஒரு சில வரிகளில் தெளிவாக எழுதி அனுப்பினார்:

"தங்கள் மீது சுமத்தப்பட்டத் தளைகளை அறுத்து, தம்மைத்தாமே சுயமாக ஆட்சி செய்ய வேட்கை கொண்டுள்ள எல்லா மனிதர்களுக்கும், இந்நாடு ஓர் அடையாளமாக இருக்கட்டும். மனிதர்களின் சிந்திக்கும் திறன், மற்றும், தங்கள் தனிப்பட்ட எண்ணங்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் ஆகியவற்றை, இந்த அரசு உலகிற்கு எடுத்துரைக்கட்டும். மனித உரிமைகளைக் குறித்து, இங்குள்ளோரின் கண்கள் திறக்கப்பட்டுள்ளன என்பது நமக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் ஆசீர்வாதம்" என்று, ஜெப்பர்சன் அவர்கள் இம்மடலில் கூறியிருந்தார். 1826ம் ஆண்டு, ஜூன் 24ம் தேதி ஜெப்பர்சன் அவர்கள் எழுதிய இம்மடலே, அவர் இறுதியாக எழுதிய மடல், ஏனெனில், 10 நாட்கள் சென்று, அதாவது, 1826ம் ஆண்டு, ஜூலை 4ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டு சுதந்திர நாளின் பொன்விழாவன்று, ஜெப்பர்சன் அவர்கள் மரணமடைந்தார்.

அமெரிக்க ஐக்கிய நாடு வளம்கொழிக்கும் ஒரு சுதந்திர நாடு என்றும், அதில் நுழைவதே தங்கள் கனவு என்றும் எண்ணியிருக்கும் ஆயிரமாயிரம் இளையோர், அந்நாட்டின் தற்போதைய அரசுத்தலைவர், நாளொன்றுக்கு, வெவ்வேறு அரசாணைகள் இயற்றி வருவதையும், தடுப்புச் சுவர் எழுப்புவதையும், சரியான ஆவணங்கள் இன்றி நாட்டிற்குள் நுழைந்த குடும்பங்களிலிருந்து குழந்தைகளைப் பிரித்து, கூண்டுகளில் அடைத்திருப்பதையும், அமெரிக்க ஐக்கிய நாட்டு சுதந்திர நாளன்று இளையோர் எண்ணிப்பார்க்கக் கடமைப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.