2018-07-03 15:36:00

தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிக்கொண்ட சிறார் உயிருடன்


ஜூலை,03,2018. தாய்லாந்தில் அடிநில குகைக்குள் சிக்கிக்கொண்ட 12 சிறாரும், அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும் உயிரோடு இருப்பதாகவும், நான்கு மாதங்களுக்குத் தேவையான உணவு அவர்களுக்கு வழங்கப்படும் எனவும், அவர்கள் தங்களின் குடும்பங்களுக்குத் திரும்புவதற்குமுன், நீச்சலில் தலைகீழ் பாயும் பயிற்சி அளிக்கப்படும் எனவும் செய்திகள் கூறுகின்றன.

இதற்கிடையே, தாய்லாந்தின் அடிநில குகையில் காணாமல் போயுள்ள சிறார் குறித்து, இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர், தன் கவலையை வெளியிட்ட திருத்தந்தை, அவர்களுக்காக தான் தொடர்ந்து செபித்து வருவதாகவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்தின் மா சே நகரிலுள்ள தாம் லுவாங் என்ற அடிநில குகை, 10 கி.மீ நீளம் உள்ளது. மியான்மார் மற்றும் லாவோஸ் நாடுகளுக்கு இடையிலுள்ள இந்த குகைக்குள் சென்றுவிட்டால் பாதை அறிந்து திரும்பி வருவது மிகவும் கடினம்.

கடந்த வாரம் 11வயது முதல் 16வயது வரையுடைய 12 சிறார் கொண்ட கால்பந்து அணி இந்த குகைக்குள் சென்றுள்ளது. அணியின் துணைப்பயிற்சியாளரும் உடன் சென்றார். இவர்கள் குகைக்குள் சென்ற நாளிலிருந்து பருவமழை தீவிரமடைந்ததால், குகையைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்தது. அதனால் மீட்புப்படையினர் உள்ளே செல்ல முடியவில்லை. தற்போது மழை நின்றுவிட்ட நிலையில், கடந்த ஒன்பது நாள்களாக குகைக்குள் சிக்கியிருந்த சிறார் உயிரோடு இருப்பதாக, இத்திங்களன்று கண்டறியப்பட்டுள்ளது.  

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜப்பான், சீனா, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகளில் இருந்து கடற்படை வீரர்கள், தண்ணீரில் தேடுதலில் நிபுணத்துவம் பெற்ற வீரர்கள் போன்றோர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.