2018-07-04 15:25:00

கர்தினால் சாக்கோவை வாழ்த்திய உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம்


ஜூலை,04,2018. கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும்தந்தை லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கர்தினால் பொறுப்பை வழங்கியதற்காக, உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம், தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

இந்த மன்றத்தின் பொதுச் செயலர் Olav Fykse Tveit அவர்கள், ஜூலை 2, இச்செவ்வாயன்று அனுப்பியுள்ள வாழ்த்து மடலில், முதுபெரும் தந்தை, கர்தினால் சாக்கோ அவர்கள், ஈராக் நாட்டிலும், மத்தியக் கிழக்குப் பகுதியிலும் மேற்கொண்டுள்ள தலைமைப்பணியைப் பாராட்டியுள்ளார்.

ஈராக்கிலும், மத்தியக் கிழக்கு நாடுகளிலும் நிலையான அமைதியைக் கொணர கர்தினால் சாக்கோ அவர்கள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு உலக கிறிஸ்தவ சபைகள் மன்றத்தின் ஆதரவு உண்டு என்ற உறுதியையும் Olav Fykse Tveit அவர்கள் இம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.

ஈராக், மற்றும், மத்தியக் கிழக்குப் பகுதி மக்களுக்கு, குறிப்பாக, கிறிஸ்தவர்களுக்கு கர்தினால் சாக்கோ அவர்கள் நம்பிக்கையின் அடையாளமாக விளங்குவதற்கு, உலக கிறிஸ்தவ சபைகள் மன்றத்தின் பொதுச்செயலர், Olav Fykse Tveit அவர்கள், தன் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.