2018-07-10 14:55:00

இமயமாகும் இளமை - 'எல்லாம் சரியாகிவிடும், கவலைப்படாதீர்கள்'


1965ம் ஆண்டு, வியட்நாம் போரில், நிலத்தடி கண்ணிவெடி ஒன்றில் கால் வைத்ததால், தன் இரு கால்களையும் இழந்தவர் பாப் பட்லர் (Bob Butler) என்ற இளம் இராணுவ வீரர். 'போர் நாயகன்' (War hero) என்ற பெருமையுடன், சக்கர நாற்காலியில் வீடு திரும்பினார் பாப். கால்களை இழந்தாலும், துணிவுடன் வாழ்வை எதிர்கொண்டார். சில ஆண்டுகள் சென்று, தன் வீரத்தையும், பிறரன்பையும் நிலைநாட்ட, மீண்டும் ஒரு வாய்ப்பு அவருக்கு உருவானது.

ஒரு நாள் அவர் தன் வீட்டுத் தோட்டத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, அடுத்த வீட்டிலிருந்து ஒரு பெண் அலறுவதைக் கேட்டார். சக்கர நாற்காலியில் அங்கு வேகமாகச் சென்றார். அங்கு, வீட்டின் பின்புறத்தில் இருந்த நீச்சல் குளத்திற்கு அருகே நின்றபடி ஓர் இளம் தாய், குளத்தில் விழுந்துவிட்ட தன் 3வயது மகளைக் காப்பாற்ற முடியாமல் கத்திக் கொண்டிருந்தார். பாப் பட்லர் உடனே தண்ணீரில் குதித்து, குளத்தின் கீழ் மட்டத்தில் கிடந்த சிறுமி ஸ்டெஃபனியை (Stephanie) மேலே கொண்டுவந்து, அவருக்குத் தேவையான முதல் உதவிகளைச் செய்தார். "கவலைப் படாதீர்கள், உங்கள் மகள் பிழைத்துக்கொள்வாள்" என்று அந்தத் தாய்க்கு நம்பிக்கை அளித்தார் பாப். பேச்சு மூச்சற்று, முகமெல்லாம் நீலம் பாய்ந்திருந்த அச்சிறுமியின் உடலிலிருந்து நீரை அகற்ற அவர் செய்த முயற்சி வெற்றி கண்டது. ஸ்டெஃபனி தன் வாய் வழியாக நீரை வெளியேற்றினார். மீண்டும் மூச்சுவிடத் துவங்கினார்.

தன் மகள் இறந்துவிட்டதாக எண்ணி, தான் கதறிக்கொண்டிருந்தபோது, அவள் பிழைத்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை அவருக்கு மட்டும் எவ்விதம் ஏற்பட்டதென்று, அந்தத் தாய் கேட்டபோது, தனக்கு வியட்நாமில் நிகழ்ந்த விபத்தைக் குறித்துச் சொன்னார் பாப். "நான் கண்ணிவெடியால் அடிபட்டு கிடந்தபோது, அவ்வழியே வந்த ஒரு வியட்நாம் சிறுமி, என்னை அவர் கிராமத்துக்கு இழுத்துச்சென்றார். போகும் வழியெல்லாம் அவர் என்னிடம், 'எல்லாம் சரியாகிவிடும், கவலைப்படாதீர்கள்' என்று மட்டுமே சொல்லியபடி என்னை இழுத்துச்சென்றார். அன்று, அச்சிறுமி தந்த நம்பிக்கைதான் என்னை வாழ வைத்தது" என்று கூறினார், இளம் வீரர், பாப் பட்லர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.