2018-07-13 16:08:00

புலம்பெயர்ந்த சிறாரை குடும்பங்களுடன் சேர்க்கும் முயற்சி


ஜூலை,13,2018. அமெரிக்க ஐக்கிய நாட்டு எல்லைகளில் புலம்பெயர்ந்த குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்ட பிள்ளைகளை, மீண்டும் அக்குடும்பங்களுடன் ஒன்றிணைப்பதற்கு தொடர்ந்து எடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் குறித்து அமெரிக்க கத்தோலிக்க அமைப்புகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் (USCCB) புலம்பெயர்ந்தவர் மற்றும் குடிபெயர்ந்தவர் பணிக்குழுவும், அந்நாட்டு கத்தோலிக்க பிறரன்பு அமைப்புகளும் (CCUSA) இணைந்து, ஜூலை 12, இவ்வியாழனன்று வெளியிட்ட அறிக்கையில், இந்தச் சிறாருக்கு உதவும் நிறுவனங்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பது விளக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்த குடும்பங்களிலிருந்து பிள்ளைகளைப் பிரிக்கும் கொள்கைகளை வன்மையாய் எதிர்ப்பதாகவும், இப்பிள்ளைகள் தங்கள் குடும்பங்களுடன் இணைவதற்குத் தாங்கள் தொடர்ந்து உழைக்கவிருப்பதாகவும் அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

குடும்பங்களைப் பாதுகாப்பது, கத்தோலிக்க சமூகப் போதனையின் அடிப்படை கூறு என்றும், புலம்பெயர்ந்த சிறாரை, அவர்களின் குடும்பங்களுடன் ஒன்றிணைக்கும் முயற்சிக்கு, நன்மனம் கொண்ட எல்லாரும் உதவுமாறும், அந்நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.