2018-07-14 16:03:00

திருப்பீடம், சீனா கலந்துரையாடல்


ஜூலை,14,2018. உலகளாவிய நடைமுறையின்படி, நாடுகளுக்கு இடையே இடம்பெறும் கலந்துரையாடல்கள் முழுவதும் இரகசியம் காக்கப்படும் மற்றும் இவற்றின் கடைசி முடிவுகளே பொதுவாக வெளியிடப்படும் என்ற காரணத்தால், திருப்பீடத்திற்கும் சீன அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெறும் கலந்துரையாடல்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படாமல் உள்ளன என்று, வத்திக்கான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சீனாவில், சில ஆயர்கள், திருஅவை சட்டத்திற்கு மாறாக நியமிக்கப்பட்டவர்கள் என்றும், மற்றவர்கள், சீன அரசின் அங்கீகாரம் இல்லாமல் உள்ளனர் என்றும் கூறியுள்ள அதிகாரிகள், திருப்பீடத்திற்கும் சீனாவுக்கும் இடையே இடம்பெறும் கலந்துரையாடல்களில், இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கும் வழிகள் ஆராயப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளனர்.

இதன் வழியாக ஒரு நேர்மறையான புதுப்பித்தலைத் தொடங்கலாம் எனவும் கூறியுள்ள அதிகாரிகள், இவ்வுரையாடல்களில் ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டால், இது, மறைமாவட்டங்களின் மேய்ப்புப்பணி தலைவர்களிடையே ஒன்றிப்பைக் கட்டியெழுப்புவதற்கு, திருஅவைக்கு உதவும் எனவும் கூறியுள்ளனர்.

தற்போது பல மறைமாவட்டங்கள் ஆயர்களின்றி உள்ளன என்பதையும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.