2018-07-18 15:35:00

நிக்கராகுவா அமைதிக்காக திருத்தந்தையின் பெயரால் விண்ணப்பம்


ஜூலை,18,2018. நிக்கராகுவா நாட்டில் அரசு மேற்கொண்டுள்ள அடக்குமுறைகளை கைவிட்டு, உரையாடலை மேற்கொள்ளவேண்டும் என்று, அந்நாட்டில் பணியாற்றும் திருப்பீடத் தூதர், பேராயர் Waldemar Stanislaw Sommertag அவர்கள், திருத்தந்தையின் பெயரால் விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளார்.

சரியாக மூன்று மாதங்களுக்கு முன், அதாவது, ஏப்ரல் 18ம் தேதி முதல், நிக்கராகுவா நாட்டில் நிகழ்ந்துவரும் வன்முறைகளால் இதுவரை 360 பேர் இறந்துள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள பேராயர் Sommertag அவர்கள், மக்களின் உயிர்களைப் பறிப்பதால் அமைதியை உருவாக்க முடியும் என்று நினைப்பது தவறு என்று கூறியுள்ளார்.

ஜூலை 9, கடந்த திங்களன்று, நிகராகுவா அரசுத்தலைவருக்கு எதிராகப் போராடியவர்களில் சிலர், திரியாம்பா நகர் புனித செபாஸ்டின் பசிலிக்காவில் அடைக்கலம் புகுந்ததையடுத்து, அக்கோவிலை அரசின் ஆதரவு படையினர் சூழ்ந்தனர்.

அம்மக்களை விடுவிக்கச் சென்ற நிக்கராகுவா கர்தினால் Leopoldo José Brenes Solorzano அவர்களையும், திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் Waldemar Sommertag, மற்றும் துணை ஆயர் Silvio José Baez Ortega ஆகிய மூவரையும் அரசு ஆதரவுக் குழுவினர் தாக்கினர்.

இதற்கிடையே, ஜூலை 16 இத்திங்களன்று, அண்மை நாடான கோஸ்டா ரிக்காவில் தன் பயணத்தை மேற்கொண்டுள்ள ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், நிக்கராகுவா நாட்டில் அதிர்ச்சியளிக்கும் வகையில் நிகழ்ந்துவரும் கொடுமையான அடக்குமுறை உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

2007ம் ஆண்டு முதல் பதவியில் தொடர்ந்துவரும் டேனியல் ஒர்தேகா அவர்கள் பதவியிலிருந்து விலகவேண்டும் என்று, ஏப்ரல் 18ம் தேதி முதல் நிக்கராகுவா நாடெங்கும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.