2015-01-31 16:14:00

ஞாயிறு சிந்தனை – பொதுக்காலம் நான்காம் ஞாயிறு


சன.31,2015.  பத்தாண்டுகளுக்கு முன் நான் பெற்ற ஓர் அனுபவம் இப்போது என் மனதில் நிழலாடுகிறது. இயேசு சபையினர் நடத்தும் ஒரு நிறுவனத்தில் முக்கியமான பொறுப்பை ஏற்கும்படி எனக்கு உத்தரவு வந்தது. அந்தப் பொறுப்பை என்னால் திறம்படச் செய்யமுடியுமா என்ற தயக்கம் எனக்கு. இயேசு சபையில் இன்னும் சில உயர்ந்த பொறுப்புக்களை ஏற்று அனுபவம் பெற்றிருந்த மற்றொரு குருவின் ஆலோசனையைத் தேடினேன். அவர் எனக்குக் கொடுத்த ஒரு சில தெளிவுகள் அந்தப் பொறுப்பை ஏற்பதற்கு எனக்கு உதவின. அவர் சொன்னவற்றில் ஒரு கருத்து இன்னும் என் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது.

"உங்களுக்குத் தரப்படும் இந்தப் பொறுப்பு, நீங்கள் போராடி வெற்றிபெற்ற ஒரு பதவி அல்ல. இந்த நிறுவனத்திற்கு பணி செய்ய உங்களுக்குக் கிடைத்த ஓர் அழைப்பு இது. எந்த ஒரு முக்கியமான பொறுப்பிலோ, அதிகாரத்திலோ செயல்பட உங்கள் அறிவுத்திறமை, நிர்வாகத்திறமை இவைகளை விட மற்றொரு மிக முக்கியமான பண்பு தேவை. நீங்கள் நம்பிக்கைக்கு உரியவராக இருக்கிறீர்களா என்பதே உங்களுக்கு மிகவும் தேவையான பண்பு. அறிவுத்திறமை, நிர்வாகத்திறமை இவைகளில் உங்களுக்கு குறைகள் இருந்தால், இத்திறமைகள் உள்ள மற்றவர்களது உதவியை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், நீங்கள் நம்பிக்கைக்கு உரியவர் என்பதில் குறை ஏற்பட்டால், அந்தக் குறையைத் தீர்க்க மற்றவர்களால் முடியாது." என்று அந்த அனுபவம் மிக்க குரு அன்று சொன்னது என் மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்துவிட்டது.

அதிகாரத்தில் இருப்பவர் நம்பிக்கைக்கு உரியவராக இருக்க வேண்டும் என்று அவர் சொன்னது, அதிகாரம் என்ற சொல்லுக்கு ஒரு புதிய இலக்கணத்தைச் சொல்லித் தந்தது. பத்தாண்டுகளுக்கு முன் அதிகாரத்தைப் பற்றி நான் கற்றுக்கொண்ட பாடத்தை இன்று அசைபோடக் காரணம்... இன்றைய ஞாயிறு வாசகங்கள். இறைவாக்கினர் என்ற பொறுப்பை ஏற்பவர் எத்தகையவராய் இருக்க வேண்டும் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்லித் தருகிறது. மறைநூல் அறிஞரைப் போலன்றி, தனிப்பட்ட ஓர் அதிகாரத்துடன் இயேசு கற்பித்தார் என்று இன்றைய மாற்கு நற்செய்தி நமக்குச் சொல்கிறது. அதிகாரம் என்பதைக் குறித்து நமது கண்ணோட்டம் என்ன, நாம் அதிகாரத்தை எவ்விதம் பயன்படுத்துகிறோம் என்ற எண்ணங்களை எழுப்பவும், இறைபணிகளில் ஈடுபடும் ஒருவர் எத்தகைய அதிகாரம் கொண்டிருக்க வேண்டும் என்பதைச் சிந்திக்கவும், இன்று நமக்கு ஒரு வாய்ப்பு.

இதோ இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகள்:

மாற்கு நற்செய்தி 1: 21-22

ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.

இயேசுவின் போதனை மக்களை வியப்பில் ஆழ்த்தியது. அதுமட்டுமல்ல. அவர்கள் இதுவரை கேட்டிராத ஓர் அதிகாரத்துடன் ஒலித்தது இந்தப் போதனை. இயேசுவுக்கு இந்த அதிகாரம் எங்கிருந்தது வந்தது?

அதிகாரம் என்று நாம் தமிழில் பயன்படுத்தும் சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல் 'Authority'. இந்தச் சொல்லுக்கு Oxford அகராதியில் இரு வேறுபட்ட அர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முதல் வகை அர்த்தம் நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் சக்தி, பதவி, நிறுவனம் என்ற அர்த்தங்களில் ஒலிக்கின்றது. இரண்டாவது வகை அர்த்தம்தான் நாம் இன்று சிந்திக்க வேண்டியது. இதில், Authority என்ற வார்த்தைக்கு ‘the power to influence others, especially because of one’s commanding manner or one’s recognized knowledge about something’ என்று அர்த்தம் தரப்பட்டுள்ளது.

இந்த இரண்டாவது அர்த்தத்தை வார்த்தைகளால் விளக்குவதற்குப் பதில், ஒரு கற்பனைக் காட்சியின் மூலம் புரிந்துகொள்ள முயல்வோம். உயர்ந்த பதவியில் இருக்கும் பல உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளும் ஒரு கூட்டத்தைக் கற்பனை செய்துகொள்வோம். கூட்டம் நடைபெறும் அரங்கத்திற்குள் ஒவ்வொரு தலைவரும் நுழையும்போது, அவர்கள் பெயர்கள் அறிவிக்கப்படும், அவர்களைச் சுற்றி பலர் வருவார்கள். ஒரு பிரம்மாண்டமான இசை ஒலிக்கும். அந்தத் தலைவரைப் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் கைகள் தட்ட வேண்டியிருக்கும். அந்நேரம், அந்தக் கூட்டத்திற்கு மதர் தெரேசா அல்லது காந்தியடிகள் அல்லது மக்களின் மனங்களில் உயர்ந்த இடம் பிடித்திருக்கும் ஓர் உன்னத மனிதர் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரைப் பற்றி அறிவிப்புக்கள் தேவையில்லை, அவரைச் சுற்றி பலர் நடந்து வரவும் தேவையில்லை. அவர் அங்கு நுழைந்ததும், அந்த அரங்கத்தில் உருவாகும் மரியாதை தனிப்பட்ட வகையில் இருக்கும்.  அங்கு இருப்பவர்கள் எந்தவித தூண்டுதலும் இல்லாமல் எழுந்து நிற்பார்கள். கரவொலி எழுப்புவதற்குப் பதில், அவரைக் கையெடுத்து கும்பிடுவார்கள். இதுதான் உள்ளூர உருவாகும் மரியாதை. இந்த மரியாதைக்குக் காரணம், அந்த மாமனிதர்கள் நம் உள்ளங்கள் மீது கொண்டிருக்கும் அதிகாரம். இந்த அதிகாரம்தான் 'Authority' என்ற வார்த்தைக்குத் தரப்படும் இரண்டாவது வகையான அர்த்தம். இந்த இரண்டாவது வகையில் மற்றொரு அம்சமும் அடங்கியுள்ளது.

ஒரு குறிப்பிட்டத் துறையில் ஒருவர் பெற்றுள்ள ஆழமான புலமைத்துவம், அந்தப் புலமைத்துவத்தின் அடிப்படையில் அதைப் பற்றிப் பேசுவதற்கோ, எழுதுவதற்கோ அவர் சுயமாகப் பெறும் அதிகாரம்... இது இந்த இரண்டாவது அர்த்தத்தில் பொதிந்துள்ள மற்றோர் அம்சம். பல ஆண்டுகள் பல்லாயிரம் சோதனைகளை மேற்கொண்டு மின்விளக்கை உருவாக்கியவர் தாமஸ் ஆல்வா எடிசன். மின்விளக்கைப் பற்றிப் பேச இவரைவிட யாருக்கு அதிகாரம் இருக்க முடியும்? எடிசன் எந்த ஒரு பள்ளியிலும் பயின்றதாகத் தெரியவில்லை. கல்வி பயிலவே அருகதையில்லை என்று வீட்டுக்கு அனுப்பப்பட்ட அவர், தன் சொந்த படைப்பாற்றல் கொண்டு 1000க்கும் அதிகமான கண்டுபிடிப்புக்களை உலகறியச் செய்தார். தன் கண்டுபிடிப்புக்களைப் பற்றி பேசும் அதிகாரமும் பெற்றார்.

அதிகாரம் என்ற வார்த்தையைப் பற்றி வகுப்பு எடுப்பதாக நினைக்க வேண்டாம். அதிகாரம் என்பது நாம் தினமும் சந்திக்கும் ஒரு மனித அனுபவம். இதை நாம் சரியாகப் புரிந்து கொண்டால், எத்தனையோ பிரச்சனைகளைச் சமாளிக்க முடியும், தீர்க்க முடியும். நமது குடும்பங்களில் ஆரம்பித்து, உலக நாடுகளின் பேரவைகள் வரை அதிகாரம் பல வடிவங்களில் இருக்கின்றது.

போட்டியிட்டுப் பெறும் பதவிகளால் ஒருவருக்குக் கிடைக்கும் அதிகாரம் நிரந்தமானது அல்ல. மாறாக, உன்னதமான பண்பு, அல்லது உயர்ந்த அறிவு இவைகளைக் கொண்டு ஒருவர் தனக்குள் உருவாக்கிக்கொள்ளும் அதிகாரம் அவர் வாழ்நாள் முழுவதும் தொடரும். இந்த அதிகாரத்தில் பொதுவாக ஆணவம் இருக்காது. அடுத்தவரை அடக்கி ஆள வேண்டும் என்ற ஆவல் இருக்காது. தங்கள் கருத்தை மற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்களா, மாட்டார்களா என்ற பயம், ஐயம் இவை எதுவும் இருக்காது. ஒருவர் சுயமாக தனக்குள் வளர்த்துக்கொள்ளும் இந்த அதிகாரம், உள்மன சுதந்திரத்தைத் தரும், உண்மைகளைப் பேச வைக்கும். அது கேட்பவர்களையும் சுதந்திரம் அடையச் செய்யும், உண்மையை நோக்கி அவர்களை வழி நடத்தும்.

இயேசுவின் அதிகாரம் இந்த வகையைச் சார்ந்தது. அவர் எந்த ஒரு குருவிடமோ, பள்ளியிலோ பயிலவில்லை. இறைவனைப்பற்றி தன் வாழ்வில் ஆழமாக உணர்ந்து தெளிந்தவைகளை மக்களிடம் பகிர்ந்துகொண்டார். எனவே அவர் சொன்னவை மக்களை வியப்பில் ஆழ்த்தியது. இதுவரை ஏதோ மனப்பாடம் செய்தவைகளைச் சொல்வதுபோல் மறைநூல் வல்லுனர்கள் கூறிவந்த பாடங்களுக்கும், இயேசு தன் சொந்த அனுபவத்தில் கண்டுணர்ந்த உண்மைகளைச் சொன்னதற்கும் வேறுபாடுகள் இருந்தன. கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதை இயேசு ஆழமாக உணர்ந்ததால், அவர் இந்த அதிகாரத்துடன் போதித்தார்.

கடவுளால் அனுப்பப்படும், அவரால் உருவாக்கப்படும் இறைவாக்கினர்களின் இயல்பைப் பற்றி இன்றைய முதல் வாசகம் நமக்கு விளக்குகிறது. இறைவன் சொன்ன செய்திகளைச் சரியாகப் புரிந்துகொண்டு, அவற்றைத் தங்களுக்கு விளக்கி, தங்களை இதுவரை வழிநடத்தி வந்த மோசே என்ற இறைவாக்கினர் இறக்கும் தருவாயில் இருந்ததால் கலக்கம் அடைந்திருந்த இஸ்ரயேல் மக்களுக்கு ஆறுதல் சொல்வதாக அமைந்திருந்தது மோசேயின் சொற்கள்:

இணைச்சட்டம் 18: 15-20

மோசே மக்களிடம் கூறியது “ஆண்டவர் என்னைநோக்கி, ‘உன்னைப்போல் ஓர் இறைவாக்கினனை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன். நான் கட்டளையிடுவது அனைத்தையும் அவன் அவர்களுக்குச் சொல்வான். என்பெயரால் அவன் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவி கொடாதவனை நான் வேரறுப்பேன். ஆனால், ஓர் இறைவாக்கினன் எனது பெயரால் பேசுவதாக எண்ணிக்கொண்டு, நான் அவனுக்குக் கட்டளையிடாதவற்றைப் பேசினால், அல்லது வேற்றுத் தெய்வங்களின் பெயரால் பேசினால், அந்த இறைவாக்கினன் சாவான்.’”

மோசே துவங்கி, இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர்களாக, தலைவர்களாக பலர் இருந்தனர். அவர்களில் பலர் பதவியில் இருந்து அதிகாரம் செலுத்தவில்லை. பலர் பரிதாபமான நிலையில் வாழ்ந்தனர். ஆனாலும், இறைவன் பெயரால் பேசுகிறோம் என்ற அந்த அதிகாரம் ஒன்றே அவர்களைத் துணிவுடன் செயல்பட வைத்தது. இந்த இறைவாக்கினர்களின் முழு வடிவமாக, இறை வாக்காகவே வந்த இயேசு அதிகாரம் என்ற சொல்லுக்கு இன்னும் பல புதிய இலக்கணங்களைத் தந்தார்.

நாம் வாழும் இந்நாட்களில், அதிகாரம் என்பதற்கு ஒரு புது இலக்கணத்தை தன் சொல்லாலும், வாழ்வாலும் சொல்லித் தருபவர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். இவர், 2013ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி, புனித யோசேப்பு திருநாளன்று, கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராகப் பொறுப்பேற்றார். அத்திருப்பலியில் ஆற்றிய அவர் மறையுரை, அதிகாரம் என்ற வார்த்தைக்கு, ஆழமும் அர்த்தமும் தந்தது. தலைமைத்துவம், ஒரு பணியே அன்றி, பதவியோ, அதிகாரமோ அல்ல என்பதை தெளிவாக்கினார் திருத்தந்தை. இதோ, திருத்தந்தை ஆற்றிய மறையுரையிலிருந்து ஒரு சில எண்ணங்கள்:

புனித யோசேப்புவின் பெருவிழாவுடன், உரோம் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பணியின் துவக்கவிழாவையும் இன்று நாம் கொண்டாடுகிறோம். பேதுருவின் வழித்தோன்றல் என்ற நிலை அதிகாரமுள்ள ஒரு நிலை. இயேசு பேதுருவுக்கு அதிகாரம் அளித்தார். ஆனால், அது, எவ்வகை அதிகாரம்?

பணிபுரிவதே உண்மையான அதிகாரம். இந்தப் பணியில் தன்னை முழுவதும் இணைத்து, சிலுவையில் இறுதியில் இணைவதே திருத்தந்தையின் அதிகாரம். சிறப்பாக, மனுக்குலத்தில் வறியோர், வலுவிழந்தோர், எவ்வகையிலும் முக்கியத்துவம் பெறாதோர் திருத்தந்தையின் பணியில் முதலிடம் பெறவேண்டும். அன்புடன் பணிபுரிபவர்களால் மட்டுமே அகிலத்தைப் பாதுகாக்க முடியும்.

குடும்பப் பொறுப்புகளில் ஆரம்பித்து, அரசியல், மதம் சமுதாயம் என்று பல துறைகளிலும் பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரும் அதிகாரம் என்பதைச் சரியான கண்ணோட்டத்தில் நோக்குவதற்கு இன்றைய வாசகங்கள் சொல்லித்தரும் பாடங்களை நாம் பயில வேண்டும்... நமக்குள் நாமே வளர்த்துக் கொள்ளும் உன்னதப் பண்புகளால் நாம் மற்றவர்களின் மதிப்பைப் பெற வேண்டும் என்று இயேசு வாழ்ந்து காட்டிய அந்த வழியில் வாழ இறையருளை மன்றாடுவோம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.