ஏப்.25,2015. ஒருமைப்பாட்டுணர்வு என்ற சொல், இக்காலத்தில் இறைவாக்குச் சக்தியைக் கொண்டுள்ளது என்று, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் பெயரிலான நிறுவன உறுப்பினர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சனிக்கிழமையன்று இந்நிறுவனத்தின் உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் என 120 பேரைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் புனிதர்பட்ட நிகழ்வு, இந்நிறுவனத்தின் பணிக்குப் புதிய உந்துதலைக் கொடுத்து, இது உலக அளவில் இன்னும் விரிவடையவும் உதவியுள்ளது என்று கூறினார்.
புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் மிகவும் அன்புகூர்ந்த இளையோரின் கல்விக்கும், அவர்களுக்கான மேய்ப்புப்பணிக்கும் இந்நிறுவனம் அதிகம் உதவி வருவதைப் பாராட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் நமக்கு விட்டுச்சென்ற வளமையான சமூகக் கோட்பாடுகளை எப்போதும் நடைமுறைப்படுத்தவும் இந்நிறுவனத்தினரை ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1981ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட புனித 2ம் ஜான் பால் நிறுவனம், கல்வி, அறிவியல், கலாச்சாரம் மற்றும் மதம் சார்ந்த துறைகளில் பிறரன்புப் பணிகளை ஆற்றி வருகின்றது. இது வத்திக்கானில் உள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |