2015-11-30 15:22:00

பாங்கி மத்திய மசூதியில், திருத்தந்தை வழங்கிய உரை


நவ.30,2015. பாங்கி மத்திய மசூதியில், இஸ்லாமியரைச் சந்தித்தபோது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரை:

அன்பு இஸ்லாமிய நண்பர்களே, கிறிஸ்தவரும், இஸ்லாமியரும் சகோதரர்கள், சகோதரிகள். உங்கள் நாட்டை அண்மைக் காலங்களில் உலுக்கி எடுத்த வன்முறை நிகழ்வுகள், சரியான மதக் கொள்கைகளில் ஊன்றப்படாதவை. இறைவனை நம்புவதாக அறிக்கையிடுவோர், அமைதியின் மனிதர்களாகவும் இருக்கவேண்டும். கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களைச் சேர்ந்தவர்கள் எத்தனையோ ஆண்டுகள் அமைதியில் கூடி வாழ்ந்துள்ளனர். நாம் ஒன்றிணைந்து, வன்முறைக்கும், வெறுப்புக்கும் ‘முடியாது’ என்று மறுப்பு சொல்லவேண்டும்.

இந்நாட்டின் கிறிஸ்தவ, இஸ்லாமியத் தலைவர்கள், ஒற்றுமையை, அமைதியைக் கொணர அரும்பாடு பட்டுள்ளனர். அவர்களுக்கு என் நன்றியைக் கூற விழைகிறேன். நெருங்கிவரும் தேசிய ஆலோசனைக் கூட்டங்கள், மத்திய ஆப்ரிக்க நாட்டவரை ஒருங்கிணைக்கும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளேன். உங்கள் குழந்தைகள் அமைதியானச் சூழலில் வளர நீங்கள் ஆவன செய்யவேண்டும் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

ஆப்ரிக்கக் கண்டத்தின் மையத்தில் இருக்கும் இந்நாட்டின் மக்கள் மேற்கொள்ளும் கூட்டுறவு முயற்சிகள், இந்தக் கண்டத்தின் அனைத்து நாடுகளிலும் பரவட்டும்.

அன்பு நண்பர்களே, ஒப்புரவு, உடன்பிறந்த உணர்வு, ஒருங்கிணைப்பு ஆகியவற்றை உறுதி செய்ய செபியுங்கள், செயல்படுங்கள்.

இறைவன் உங்களை ஆசீர்வதித்து, காப்பாராக! சலாம் அலைக்கும்! (Salam alaikum!)

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.