2016-10-10 15:48:00

பங்களாதேஷ் உட்பட 5 நாடுகளுக்கு முதல்முறை கர்தினால்கள்


அக்.10,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று அறிவித்துள்ள 17 புதிய கர்தினால்களில், திருச்சிலுவை துறவு சபையைச் சார்ந்தவரும், பங்களாதேஷ் ஆயர் பேரவையின் தலைவருமான பேராயர் பாட்ரிக் டி ரொசாரியோ அவர்களும் ஒருவர். இவர், பங்களாதேஷ் நாட்டின் முதல் கர்தினாலாக நியமனம் பெற்றுள்ளார்.

பங்களாதேஷ் உட்பட, மலேசியா, பாப்புவா நியூ கினி, லெசோத்தோ, மற்றும் மத்திய ஆப்ரிக்க குடியரசு ஆகிய 5 நாடுகளில் முதல் முறையாக கர்தினால்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.

மலேசியாவின் கோலா லம்பூரில் பேராயராகவும், அந்நாட்டு ஆயர் பேரவையின் தலைவராகவும் பணியாற்றி, 2003ம் ஆண்டு ஓய்வுபெற்றுள்ள Anthony Soter Fernandez அவர்களை, கர்தினாலாக அறிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். இவருக்கு தற்போது வயது, 84.

இதேபோல், லெசோத்தோவின் முன்னாள் ஆயரும், அந்நாட்டு ஆயர் பேரவையின் தலைவருமாகப் பணியாற்றி ஒய்வு பெற்றுள்ள, 87 வயது நிறைந்த, அமலமரி தியாகிகள் சபையைச் சேர்ந்த Sebastian Koto Khoarai அவர்கள், லெசோத்தோ நாட்டின் முதல் கர்தினாலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய ஆப்ரிக்க குடியரசின் பாங்கி பேராயரும், தூய ஆவியார் துறவு சபையைச் சேர்ந்தவருமான, 49 வயது நிறைந்த Dieudonné Nzapalainga அவர்கள், அந்நாட்டின் முதல் கர்தினால் என்பதும், புதிதாக நியமனம் பெற்றுள்ள 17 கர்தினால்களில் மிகக் குறைந்த வயதுள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.