2017-01-16 16:59:00

பாகிஸ்தானின் மத சிறுபான்மையினருக்கு பிரதமரின் உறுதி


சன.,16,2017. பாகிஸ்தானில், சிறுபான்மை மதத்தவரின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த, போதிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், சிறுபான்மையினரின் நட்பு நாடாக அது விரைவில் அறியப்படும் எனவும் அறிவித்துள்ளார், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிஃப்.

பாகிஸ்தனின் பஞ்சாப் மாநிலத்தின் Chakwalல் உள்ள இந்து Kata Raj கோவிலில், புனரமைப்பிற்குப்பின் அதன் திறப்பு விழாவில் கலந்துகொண்ட பிரதமர், நாட்டை ஒன்றிணைத்து கொண்டு வருவதற்கு, ஒவ்வொருவரின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டியது அவசியம் என்றார்.

பல்வேறு மத நம்பிக்கையாளர்கள் சம உரிமைகளைக் கொண்டவர்களாக வாழ அனுமதிக்கப்படுவதுடன், நாட்டிற்கு அவர்கள் வழங்கும் பங்களிப்பும் அங்கீகரிக்கப்படவேண்டும் என்றார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃப்.

பிரதமரின் இந்த வார்த்தைகள் குறித்து தங்கள் பாராட்டுக்களை வெளியிட்ட பாகிஸ்தான் கிறிஸ்தவத் தலைவர்கள், அந்நாட்டின் கல்வித்துறை, மருத்துவத்துறை, மற்றும் இராணுவப் பிரிவில் கிறிஸ்தவர்கள் ஆற்றிவரும் சிறப்புப் பங்களிப்பை சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.