2017-02-17 15:19:00

பாசமுள்ள பார்வையில்...: ஆரோக்கியம் தரும் லூர்து அன்னை


அன்னையை நோக்கி இறைஞ்சும் பக்தர்களின் குறை தீர்க்கும் அன்னை மரியா அவர்கள், அடைக்கல மாதா, பனிமய மாதா, வேளாங்கண்ணி மாதா, வியாகுல மாதா, காணிக்கை மாதா, அமலோற்பவ மாதா, பூண்டி மாதா என்னும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். அவற்றுள் ஒன்றுதான் லூர்து மாதா.

வேளாங்கண்ணியைப் போலவே, சாதி, மதம், இன பேதங்களைக் கடந்து, மக்கள் திரளாக லூர்து நகருக்கு வருவதற்குக் காரணங்கள் இரண்டு.

160 ஆண்டுகளுக்கு முன்னர் மசபியேல் என்ற குகையில் அன்னை மரியா பெர்னதெத் சூபிரு (Bernadette Soubirous) என்ற சிறுமிக்குப் பதினெட்டு முறை காட்சி தந்தது.

இரண்டாவது, அதன் பின் இன்று வரை அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் எண்ணற்ற புதுமைகள்.

சிறுமி பெர்னதெத் சூபிரு, அன்னையை நோக்கி, ""அம்மா, உம் பெயர் என்ன?‘' என்று கேட்டபோது, "நாமே அமல உற்பவம்', அதாவது, மாசு மருவின்றி பிறந்த அன்னை என்று கூறினார். உலகிலேயே அதிக திருப்பயணிகள் செல்லும் திருத்தலமாக இன்று லூர்துநகர் காட்சியளிக்கிறது. அங்கு சென்றோர் யாருமே அன்னையின் ஆசியைப் பெறாமல் திரும்புவதில்லை.

நோயாளியின் பாதுகாவலாகத் திகழும் லூர்து அன்னை, அங்கே பொங்கிப் பெருகி வரும் அற்புத ஊற்றுத் தண்ணீரை நம்பிக்கையுடன் குடிக்கும் எண்ணற்ற நோயாளிகளுக்கு உடல் நலமும், உள்ள நலமும் கொடுத்து வருகிறார். எண்ணற்ற புதுமைகள் தினந்தோறும் நடந்து வருகின்றன.

தமிழகமெங்கும் லூர்து அன்னையின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் ஏராளமான கோயில்கள் உள்ளன. அநேக தேவாலயங்களில், கோயில் வளாகத்துக்குள்ளேயே சிறுமி பெர்னதெத்துக்கு அன்னை காட்சியளிக்கும் வண்ணம் திகழும் கெபிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

நம்பிக்கையுடன் தன்னை நாடி வரும் பக்தர்களை இறை அன்னை என்றுமே கைவிடுவதில்லை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.