2017-03-09 15:34:00

அருளாளர் ரொமேரோவின் மறையுரைகள், திருத்தந்தையிடம்


மார்ச்,09,2017. 1917ம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம் தேதி பிறந்த, அருளாளரான பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள் பிறந்ததன் முதல் நூற்றாண்டு சிறப்பிக்கப்படும் இத்தருணத்தில், அவர் வழங்கிய மறையுரைகளின் தொகுப்பு ஒன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் அண்மையில் வழங்கப்பட்டது என்று பிரித்தானிய இயேசு சபையினர் வலைத்தளம், செய்தியை வெளியிட்டுள்ளது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட, பேராயரின் மறையுரைகள் அடங்கிய ஆறு பகுதிகள் கொண்ட தொகுப்பை, பேராயர் ரொமேரோ அறக்கட்டளையின் தலைவரும், இயேசு சபை மறைபரப்புப்பணி ஆலோசகருமான, அருள்பணி Julian Filochowski அவர்கள், திருத்தந்தையிடம் வழங்கினார்.

ஆஸ்கர் ரொமேரோ அவர்கள், 1977ம் ஆண்டு, பிப்ரவரி 22ம் தேதி, சான் சால்வதோர் உயர் மறைமாவட்டத்தின் பேராயராகப் பொறுப்பேற்றதற்கும், 1980ம் ஆண்டு, மார்ச் 24ம் தேதி அவர் கொல்லப்பட்டதற்கும் இடைப்பட்ட காலத்தில், அவர் வழங்கிய 193 மறையுரைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

இம்மறையுரைகள் அனைத்தும், எல் சால்வதோர் நாட்டின் வானொலியில் ஒலிபரப்பானவை என்பது, குறிப்பிடத்தக்கது.

அருளாளர் ரொமேரோ அவர்கள் பிறந்ததன் முதல் நூற்றாண்டு சிறப்பிக்கப்படுவதையொட்டி, எல் சால்வதோர் நாட்டில், இவ்வாண்டு, ரொமேரோ ஆண்டென அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், இயேசு சபையினரின் முயற்சியால், இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து நாடுகளில், பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன என்றும், பிரித்தானிய இயேசு சபையினர் வலைத்தளம் கூறுகிறது. 

ஆதாரம் : Jesuit.org.uk / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.