2017-04-25 16:45:00

ஜூன் 20ல், Bozzolo, Barbiana இத்தாலிய நகரங்களில் திருத்தந்தை


ஏப்.25,2017. “இயேசு இறந்து, அடக்கம் செய்யப்பட்டு, உயிர்பெற்றெழுந்து, சீடர்களுக்குத் தோன்றினார். இயேசு வாழ்கிறார்! இதுவே கிறிஸ்தவச் செய்தியின் மையம்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று (ஏப்.25), கூறியுள்ளார்.

இயேசுவின் உயிர்ப்பைக் கொண்டாடும் இத்திருவழிபாட்டுக் காலத்தில், திருத்தந்தை, தன் டுவிட்டரில், இயேசுவின் உயிர்ப்புப் பற்றிய சிந்தனைகளை வெளியிட்டு வருகிறார்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற ஜூன் 20ம் தேதியன்று, Bozzolo, Barbiana ஆகிய இரு வட இத்தாலிய நகரங்களுக்குச் சென்று, அருள்பணியாளர்கள் Primo Mazzolari (1890-1959), Lorenzo Milani (1923-1967) ஆகிய இருவரின் கல்லறைகளில் செபிப்பார் என, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

இந்தப் பயணம், அதிகாரப்பூர்வ பயணம் போன்று இல்லாமல், தனிப்பட்ட பயணமாக அமைந்திருக்கும் எனவும், ஜூன் 20ம் தேதி செவ்வாய் காலை 7.30 மணிக்கு வத்திக்கான் ஹெலிகாப்டரில் புறப்படும் திருத்தந்தை, இவ்விரு நகரங்களுக்கும் சென்று, அன்று பகல் 1.15 மணிக்கு வத்திக்கான் திரும்புவார் எனவும், திருப்பீடச் செய்தித் தொடர்பகம் மேலும் கூறியது.

Bozzolo, கிரேமோனா மறைமாவட்டத்திலும், Barbiana, பிளாரன்ஸ் உயர்மறைமாவட்டத்திலும் உள்ளன. இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவ்விரு அருள்பணியாளர்களும், நிர்வாகத்திற்கு எதிராக இருந்தார்கள் எனக் குறைகூறப்பட்டாலும், இவர்கள் இருவரும் தங்களின் வாழ்நாள் முழுவதும் திருஅவைக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

அருள்பணி Lorenzo Milani இறந்ததன் 50ம் ஆண்டு நிறைவையொட்டி அவரின் கல்லறையைப் பார்வையிட்டு செபிக்கவுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், ஆயர்கள் ஐந்தாண்டுக்கொருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் அத் லிமினா சந்திப்பையொட்டி, கானாடா நாட்டின் ஓன்டாரியோ மாநிலத்தின் ஆயர்கள், இச்செவ்வாயன்று, திருப்பீடத்தில் திருத்தந்தையைச் சந்தித்து உரையாடினர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.