2017-05-25 16:30:00

அருள்பணியாளரை கொலை செய்யவுள்ளதாக புரட்சியாளர்கள் மிரட்டல்


மே,25,2017. பிலிப்பீன்சின் மராவி நகரிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட அருள்பணியாளரையும், கத்தோலிக்க விசுவாசிகளையும் கொல்ல உள்ளதாக எச்சரித்துள்ளனர் இஸ்லாமியத் தீவிரவாதிகள்.

இச்செவ்வாயன்று, மிந்தனாவோ தீவிலுள்ள மராவி நகர் பேராலயத்திற்குள் நுழைந்த இஸ்லாமியத் தீவிரவாதிகள், அங்கு செபித்துக்கொண்டிருந்த 15 கத்தோலிக்க விசுவாசிகளையும், அண்மை ஆயர் இல்லத்திலிருந்த முதன்மைக் குருவையும் கடத்திச் சென்றதுடன், ஆயர் இல்லத்தையும் பேராலயத்தையும் தீயிட்டுக் கொளுத்திச் சென்றுள்ளனர்.

இத்தாக்குதல் நடந்தபோது, அண்மை பங்குதளத்தினைச் சந்திக்கச் சென்றிருந்த ஆயர் Edwin De la Pena உரைக்கையில், மக்கள் அச்சத்தால் தங்கள் வீடுகளைப் பூட்டிக்கொண்டு இருப்பதாகவும், இஸ்லாமியப் புரட்சியாளர்களுடன் போரிட்டுவரும் பிலிப்பீன்ஸ் இராணுவம், மராவி நகரில் குண்டுவீச்சை நடத்தும் என்ற அச்சமும் நிலவுவதாகவும் தெரிவித்தார்.

தங்கள் மீதான தாக்குதல்களை இராணுவம் கைவிடவில்லையெனில், தங்களால் கடத்தி வைக்கப்பட்டுள்ள அருள்பணியாளர் Sogaun Dewatering மற்றும், ஏனைய 15 கத்தோலிக்கர்களையும் கொலை செய்யவுள்ளதாக இஸ்லாமியப் புரட்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.