2017-06-26 15:44:00

பாசமுள்ள பார்வையில்.. தாயான தெய்வம், ஏழைத்தாய் வடிவில்


ஓர் இளைஞரின் அம்மா, மருத்துவமனை ஒன்றில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில நாள்கள் சென்று, மருத்துவர்கள், அந்த இளைஞரிடம், அம்மாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளது, அவர் எந்த நேரத்திலும் இறக்கலாம் என்று கைவிரித்துவிட்டனர். அந்த இளைஞரும் மிகுந்த கவலையுடன் வீடு திரும்பினார். பின் அவர், அம்மாவைப் பார்ப்பதற்காக, மீண்டும் வீட்டிலிருந்து புறப்பட்டார். மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், தனது வாகனத்திற்குப் பெட்ரோல் நிரப்புவதற்காக நிறுத்திவிட்டு, தனது முறை வருவதற்காகக் காத்துக் கொண்டிருந்தார். அப்போது, சாலையோரத்தில், பிச்சையெடுக்கும் ஒரு பெண், தனது இரு பிள்ளைகளுடன் உட்கார்ந்திருந்ததைக் கவனித்தார். அவர்கள் மூவரும் அழுக்கான ஆடைகளை உடுத்தியிருந்தனர். தலைமுடிகள் வாரப்படாமல், பார்ப்பதற்கு அவர்கள் அலங்கோலமாக இருந்தனர். உண்மையிலேயே அவர்கள், பசியினால் வாடியிருந்ததை அந்த இளைஞர் கவனித்தார். அருகிலிருந்த கடைக்குச் சென்று, சாதாரண ஒரு பிஸ்கஸ்ட் டப்பாவை வாங்கிவந்து அதைத் திறந்து அவர்களுக்குக் கொடுத்துவிட்டு, தனது வாகனத்திற்கும் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு, மருத்துவமனைக்குச் சென்றார் அவர். அங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவு அறையில் அம்மாவைக் காணவில்லை. அம்மா இறந்துவிட்டார்கள் என்ற பதட்டத்துடன், கையில் வைத்திருந்த பொருள்களை அப்படியே போட்டுவிட்டு, செவிலியரிடம் ஓடினார் இளைஞர். “உங்கள் அம்மா திடீரென கண் திறந்தார், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் தெரிந்தது, அதனால் அவரை, அந்த அறையிலிருந்து அடுத்த அறைக்கு மாற்றியுள்ளோம்” என்றனர் செவிலியர். உடனே அந்த அறைக்கு ஓடிச் சென்று, அம்மாவின் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டு, அம்மா என்ன நடந்தது? எனக் கேட்டார் ஆனந்தக் கண்ணீருடன். அம்மா சொன்னார் – நான் மயக்கநிலையிலிருந்தபோது, அழுக்கான உடையணிந்த ஒரு பெண்ணும், அவரின் இரு குழந்தைகளும், கைகளை விண்ணை நோக்கி விரித்து, எனக்காகச் செபித்ததைப் பார்த்தேன் என்று. இளைஞர், வாயடைத்து நின்றார். இது ஓர் உண்மை நிகழ்வு.

தாயான தெய்வம், இளைஞரின் தாயைக் காப்பாற்ற, ஏழைத்தாய் வடிவில் தோன்றி, இளைஞரில் இரக்கம் சுரக்க வைத்துள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.