2017-07-20 15:12:00

பாசமுள்ள பார்வையில்.. தன்னம்பிக்கையை ஊட்டும் தாய்


அந்தப் பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு, "என் அம்மா' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி ஒன்றை அறிவித்திருந்தார், தலைமையாசிரியர். சிறந்த கட்டுரை எழுதிய மாணவியின் அம்மாவுக்குப் பரிசு என்றும் அவர் அறிவித்திருந்தார். போட்டியின் முடிவை அறிவிக்கும் நாளும் வந்தது. அன்று மாலை நான்கு மணிக்கு, மாணவிகளும், அவர்களின் அம்மாக்களும், ஆசிரியர்களும், பள்ளி வளாகத்தில் குழுமியிருந்தனர். அந்நிகழ்வில் தலைமையாசிரியர் புன்முறுவலுடன் பேசத் தொடங்கினார். கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்ட மாணவிகளில், ஒருசிலர் தவிர, மற்ற எல்லாருமே அவரவர் அம்மாக்களைப் புகழ்ந்து எழுதியிருக்கின்றார்கள். ஒருசிலர் மட்டும், என் அம்மா எப்போதும் "படி... படி' என்று நச்சரிக்கிறார்கள் என எழுதியிருக்கிறார்கள். இந்நிகழ்வில், இரண்டு மாணவிகள் எழுதிய கட்டுரையைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். மாணவி கலா இவ்வாறு எழுதியிருக்கிறார். சமையல் செய்வது, ஏனைய வீட்டு வேலைகளைச் செய்வது, அம்மாவுக்கு உதவுவது என்று, வீட்டில் எனக்கு ஓயாமல் வேலை, ஆனால் ஒருநாள்கூட என் அம்மா என்னை, ‘படி’ என்று சொன்னதில்லை, என் அம்மா எனக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்க்கிறார் என்று கலா எழுதியிருக்கிறார். அடுத்து, மாணவி கமலா, எனக்குப் படிப்பைத் தவிர வீட்டில் எந்த வேலையுமில்லை, ஒரு துரும்பைக்கூட நான் அசைப்பதில்லை, சிலசமயம் உணவைக்கூட அம்மா ஊட்டி விடுவார், இப்படி அன்பை ஊட்டி வளர்ப்பதால், என் அம்மா, ‘நல்ல அம்மா’ என்று எழுதியிருந்தார். இந்த இரண்டு பேரில் ஒருவரின் அம்மா.. என்று சொல்லிய தலைமையாசிரியர், சிறிதுநேர மௌனத்திற்குப் பின், தன்னைச் சார்ந்து இல்லாமல் இருக்கும் திறனை ஏற்படுத்தியதற்கும், தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பதற்கும், கலாவின் அம்மாவுக்குத்தான் பரிசு என்று அறிவித்தார். மாணவிகளின் பலத்த கைதட்டல் ஒலிகளுக்கு மத்தியில், கலாவின் அம்மா சின்னராணி எழுந்துவர, "பாரதியாரின் கவிதைகள்' என்னும் நூலைப் பரிசாகக் கொடுத்தார் தலைமையாசிரியர். கலாவுக்கு அப்பா கிடையாது. அம்மா சின்னராணி நான்கு மாடுகள் மேய்த்து, பால் வியாபாரம் செய்து, கலாவைப் படிக்க வைக்கிறார். கலா நன்றாகப் படிக்கும் மாணவி.

ஆம், தாய், தன்னம்பிக்கையை ஊட்டுபவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.