ஆக.16,2017. அமெரிக்க ஐக்கிய நாடு, ஆகஸ்ட் 15, இச்செவ்வாயன்று வெளியிட்ட பன்னாட்டு மதச்சுதந்திர அறிக்கையில், மாட்டிறைச்சிக்காக இந்தியாவில் நிகழ்ந்த தாக்குதல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று UCA செய்தி கூறுகிறது.
கடந்த ஆண்டுக்குரிய அறிக்கையை வெளியிட்ட அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு செயலர் ரெக்ஸ் டில்லர்சன் (Rex Tillerson) அவர்கள், மாட்டிறைச்சி தொடர்பாக, 2016ம் ஆண்டில் நிகழ்ந்த தாக்குதல்களில், இஸ்லாமியர் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர் என்று கூறியுள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்பு ஒன்று, இந்தியாவில் பல ஆண்டுகளாக வறியோர் மத்தியில் பணியாற்றிவந்தபோதிலும், அதற்கு, இந்தியாவில் தங்கள் அமைப்பை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்ய இந்திய அரசு மறுத்துள்ளதும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமுதாயப் பணிகளில் ஈடுபட்டுள்ள பல பன்னாட்டு அமைப்புக்கள், மத மாற்றம் செய்கின்றன என்ற தவறான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாவது, அண்மைய மாதங்களில் அதிகமாகியுள்ளது என்றும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |