2017-10-04 16:00:00

உலக ஆயர்கள் மாமன்ற முன்தயாரிப்பு இளையோர் கூட்டம்


அக்.04,2017.  2018ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் இளையோர் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்திற்குத் தயாரிப்பாக, அவ்வாண்டு மார்ச் 19ம் தேதி முதல், 24ம் தேதி வரை, முன்தயாரிப்பு கூட்டம் ஒன்று இடம்பெறும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று அறிவித்தார்.

இப்புதன் காலையில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நடைபெற்ற பொது மறைக்கல்வியுரையில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு, மறைக்கல்வியுரையாற்றியபின், இந்த முன்தயாரிப்பு கூட்டம் பற்றி அறிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இக்கூட்டத்தை உலக ஆயர்கள் மாமன்றச் செயலகம் நடத்தவுள்ளது என்றும்,  கத்தோலிக்க, ஏனைய கிறிஸ்தவ சபைகளைச் சார்ந்த, பிறமத மற்றும், மத நம்பிக்கையற்ற இளையோர் யாராய் இருந்தாலும், உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் இந்த முன்தயாரிப்பு கூட்டத்தில் கலந்துகொள்ளலாம் என்றும், திருத்தந்தை கூறினார்.

“இளையோர், விசுவாசம் மற்றும் இறையழைத்தலை தேர்ந்துதெளிதல்” என்ற தலைப்பில், 2018ம் ஆண்டு அக்டோபரில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்குத் தயாரிப்பாக, இந்தக் கூட்டம் நடைபெறும் என்றும், இதன்வழியாக, இளையோரின் குரல்கள், அவர்களின் விசுவாசம், அவர்களின் சந்தேகங்கள், விமர்சனங்கள் ஆகியவற்றை திருஅவை அறிய விரும்புகின்றது என்றும், திருத்தந்தை அறிவித்தார்.

2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெறும் இக்கூட்டத்தின் தீர்மானங்கள், அவ்வாண்டு அக்டோபரில் நடைபெறும் உலக ஆயர்கள் மாமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.