2017-10-07 15:04:00

நவீன இறைவாக்கினர்களாக வாழுங்கள், பாகிஸ்தான் ஆயர்


அக்.07,2017. இறைவனைவிட்டு விலகி இருக்கும் இளையோர், தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து தவறு செய்யும் இளையோர் உட்பட எல்லாருக்கும், நற்செய்தியை அறிவித்து, நவீன இறைவாக்கினர்களாகச் செயல்படுங்கள் என்று, பாகிஸ்தான் ஆயர் ஒருவர், இளையோரிடம் கேட்டுக்கொண்டார்.

"Jesus Youth Pakistan" என்ற, பாகிஸ்தான் இயேசு இளையோர் இயக்கம் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட கராச்சி உயர்மறைமாவட்ட இளையோரிடம் இவ்வாறு கேட்டுக்கொண்டார், அந்நாட்டு ஆயர் பேரவையின் பொதுநிலையினப் பணிக்குழுவின் தலைவர் ஆயர், Samson Shukardin.

பாகிஸ்தான் திருஅவைக்கு பொதுநிலையினரின் ஆதரவும், அவர்களின் திருத்தூதுப் பணியும் தேவைப்படுகின்றது எனவும், பாகிஸ்தான் இயேசு இளையோர் இயக்கம் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டுவதாகவும் கூறினார், ஆயர் Shukardin.

பாகிஸ்தான் இயேசு இளையோர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான Ayyaz Gulzar என்பவர் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்தார். 2018ம் ஆண்டில் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் இளையோர் குறித்த உலக ஆயர்கள் மாமன்றத்திற்குத் தயாரிப்பாக இக்கூட்டம் நடத்தப்பட்டது என, பீதேஸ் செய்தி கூறுகின்றது.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.