2017-10-10 09:07:00

பாசமுள்ள பார்வையில் – இயற்கை சொல்லித்தரும் மன்னிப்பு


மன்னிப்பு நம் இயல்பாகவே மாறவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வண்ணம் பலர் சொன்ன கருத்துக்களில், நம் உள்ளங்களில் ஆழமாய்ப் பதிபவை, Mark Twain அவர்கள் சொன்ன அற்புதமான வார்த்தைகள்: “Forgiveness is the fragrance that the violet sheds on the heel that has crushed it.” அதாவது, தன்னை மிதித்த கால்களில், தன் நறுமணத்தை மலர் பதிக்கிறதே; அதுவே மன்னிப்பு.

நம்மைச் சுற்றியுள்ள இயற்கையில் இதுபோல் பல நூறு உதாரணங்களைக் காணலாம். தன்னைக் கசக்கிப் பிழிபவர் கையில் இனியச் சாராய் மாறுகிறதே கரும்பு... அதுவே மன்னிப்பு. தன்னைச் சுட்டெரித்தாலும் நறுமணம் தருகிறதே சந்தனம்... அதுவே மன்னிப்பு. தங்களை வெட்டுகிறார்கள், விறகாய் எரிக்கிறார்கள் என்பதற்காக மரங்கள் நிழல் தர மறுக்கின்றனவா? இல்லையே. கலீல் கிப்ரான் என்ற கவிஞர் சொன்ன வரிகள் நினைவுக்கு வருகின்றன: கொடுப்பதே மரத்தின் இயல்பு, அழகு. நிழல் கொடுக்க, கனி கொடுக்க, ஒரு மரம் மறுத்தால், அதன் இயல்பு மாறிவிடும், அது இறந்துவிடும்.

வாழ்வில் அன்பையும், மகிழ்வையும் நிறைவாய் உணர்வதற்கு அடித்தளம், மன்னிப்பு. மன்னிப்பு தருவதும், பெறுவதும் முழு மனித நிறைவுக்கு நம்மை இட்டுச் செல்லும்.

அசிசி நகர் புனித பிரான்சிஸ் உருவாக்கிய “அமைதியின் கருவியாய் என்னை மாற்றும்” என்ற அந்த அற்புத செபத்தின் ஒரு பகுதி இதோ:

"மன்னிப்பதாலேயே, மன்னிப்பு பெறுகிறோம்.

கொடுப்பதாலேயே பெறுகிறோம்.

இறப்பதாலேயே நிறைவாழ்வில் பிறக்கிறோம்."

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.