2017-12-20 16:24:00

எருசலேம் நகர் குறித்து ஐ.நா. அவையில் வாக்கெடுப்பு


டிச.20,2017. எருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகர் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள் அறிவித்துள்ளதை, ஐ.நா. பொது அவை விவாதிக்கவேண்டும் என்று துருக்கி, மற்றும் ஏமன் நாடுகள் விடுத்துள்ள விண்ணப்பம், டிசம்பர் 21, இவ்வியாழனன்று, ஐ.நா.தலைமையகத்தில் வாக்களிக்கப்படும் என்று ஆசிய செய்தி கூறியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு அவையில் இதையொத்த ஒரு தீர்மானத்தை அண்மையில் எகிப்து முன்வைத்தபோது, அங்கு நடந்த வாக்கெடுப்பில், 15 உறுப்பினர்களில், அமெரிக்க ஐக்கிய நாடு நீங்கலாக ஏனைய 14 உறுப்பினர்கள், டிரம்ப் அவர்களின் முடிவை எதிர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சூழலில், இவ்வியாழன், ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் வாக்கெடுப்பில், 193 உறுப்பினர்கள் கொண்ட அவையில், அமெரிக்க ஐக்கிய நாடு கொணர்ந்துள்ள முடிவுக்கு பெரும் எதிர்ப்பு எழும் என்று ஆசிய செய்தி கூறியுள்ளது.

எருசலேம் குறித்து அமெரிக்க ஐக்கிய நாடு எடுத்திருக்கும் முடிவினால், அந்நாடு தனிமைப்படுத்தப்படும் என்ற வாய்ப்பு உள்ளதால், இந்த வாக்கெடுப்பில் தங்கள் முடிவை எதிர்க்கும் நாடுகளை அமெரிக்க அரசு கண்காணிக்கும் என்ற அறிவிப்பை, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஐ.நா. தூதர் விடுத்துள்ளார். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.