2018-03-30 11:36:00

அறையப்பட்ட கிறிஸ்துவை நோக்குங்கள்- திருத்தந்தையின் டுவிட்டர்


மார்ச்,30,2018. மார்ச் 30, புனித வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், "அறையப்பட்ட கிறிஸ்துவை நோக்குங்கள்: நிரந்தர வாழ்வின் நம்பிக்கை அவரிடம் பிறக்கின்றது" என்ற சொற்களைப் பதிவு செய்துள்ளார்.

அருள்பணியைக் கொண்டாடும் புனித வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஆண்டுகளில் செய்ததைப் போலவே இவ்வாண்டும், அருள்பணியாளர்களுடன் மதிய உணவைப் பகிர்ந்துகொண்டார்.

திருப்பீடச் செயலகத்தின் உயர் அதிகாரியான பேராயர் Angelo Becciu அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற இந்த மதிய உணவில், உரோம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த பத்து பங்கு அருள்பணியாளர்கள் திருத்தந்தையுடன் கலந்துகொண்டனர்.

மேலும், உரோம் நகரின் மையத்தில் அமைந்திருக்கும் கொலோசெயம் திடலில், புனித வெள்ளி மாலையில் நடைபெறும் சிலுவைப் பாதையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்துகிறார்.

கிறிஸ்தவத்தின் முதல் நூற்றாண்டில், கிறிஸ்தவர்களைக் கொடுமைப்படுத்த உருவாக்கப்பட்டிருந்த கொலோசெயம் திடலில் நடைபெறும் இந்த சிலுவைப்பாதை பக்தி முயற்சியின்போது, இன்றைய உலகில் துன்புறும் கிறிஸ்தவர்களின் நினைவாக, இத்திடல் Aid to the Church in Need என்ற அமைப்பினரால், சிவப்பு விளக்குகளால் ஒளியேற்றப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.