2018-04-13 15:24:00

சிறைகளின் நெருக்கடிகளைக் களைய அரசுக்கு அழைப்பு


ஏப்.13,2018. ஆப்ரிக்க நாடான ஐவரி கோஸ்டில், சிறு குற்றங்கள் புரிந்தவர்களுக்கு அரசுத்தலைவரின் மன்னிப்பை அளிப்பதும், விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்கு புதிய வழக்கறிஞர்களை நியமிப்பதும், அந்நாட்டுச் சிறைகளின் நெருக்கடி நிலைமையைச் சரிசெய்யும் என்று, கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.

ஐவரி கோஸ்ட் நாட்டின் 34 சிறைகளில், 16 ஆயிரத்திற்கு மேற்பட்ட கைதிகள் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இச்சிறைகளில், ஏறத்தாழ நான்காயிரம் கைதிகளுக்கே இடம் உள்ளது என்று கூறியுள்ள, அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், ஆயர் Antoine Koné அவர்கள், கடந்த ஆண்டின் இறுதியில் 4132 கைதிகளுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டதையும் விடுத்து, நாட்டின் சிறைகள் கொள்ளவுக்கு அதிகமாகவே உள்ளன என்று கூறியுள்ளார்.

ஐவரி கோஸ்ட் நாட்டின் தேசிய கைதிகள் நாளில், அபிஜான் நகரின் புனித Thérèse de Marcory ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய ஆயர் Koné அவர்கள், தன் மறையுரையில் அந்நாட்டின் சிறைகளின் நிலமையை, அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்களுக்கும் தெரிவித்துள்ளார். 

ஐவரி கோஸ்ட் ஆயர் பேரவையின் கணிப்புப்படி, 3,754 கைதிகள் இருக்கக்கூடிய சிறைகளில் 16,254 கைதிகள் வைக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் 8, இறை இரக்க ஞாயிறன்று, ஐவரி கோஸ்ட் நாட்டின் தேசிய கைதிகள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.