2018-05-28 16:48:00

தினமும் 2 நிமிடங்கள் நற்செய்தியை வாசிக்க இளையோர்க்கு அழைப்பு


மே,28,2018. ஒவ்வொரு நாளும் நற்செய்தியை வாசிக்கின்றீர்களா? என, அர்ஜென்டீனா நாட்டு இளையோரிடம் காணொளிச் செய்தியில் கேட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு நிமிடங்களாவது நற்செய்தியை வாசிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

அர்ஜென்டீனா நாட்டின் ரொசாரியோ நகரில், மே 27, இஞ்ஞாயிறன்று, மூன்று நாள் தேசிய இளையோர் மாநாட்டில் கலந்துகொண்ட இளையோர்க்கு திருத்தந்தை அனுப்பிய 15 நிமிட காணொளிச் செய்தியில், உங்களில் எத்தனை பேர், தினமும் நற்செய்தியை இரண்டு நிமிடங்கள் வாசிக்கின்றீர்கள் என்று கேட்டுள்ளார்.

ஒரு சிறிய நற்செய்தி நூலை தங்களோடு தினமும் எடுத்துச்செல்லவும், பேருந்தில் அல்லது வீட்டில் இருக்கும்போது அதனை வாசிக்கவும் வேண்டுமெனக் கூறியத் திருத்தந்தை, இது உங்கள் வாழ்வை மாற்றும், ஏனெனில் நீங்கள், இயேசுவையும், உலகையும் சந்திக்கின்றீர்கள் என இளையோரிடம் கூறினார்.

இளையோர் வாழ்வில், இயேசுவின் இருப்பு, ஒன்றிப்பு மற்றும் மறைப்பணி பற்றியும் விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு நம்மோடு என்றும் இருக்கின்றார் என்றும், இளையோர் இறைமக்கள் போன்று நடக்க வேண்டுமென்றும், மறைப்பணியாற்ற அவர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.

இளையோரே, வருங்காலம், அவர்கள், ஆழமான வேர்களைக்கொண்ட வருங்காலத்தின் உறுதியான மற்றும் வளமான நிலமாக இருக்க வேண்டுமெனவும் கூறியத் திருத்தந்தை, இளையோர் தங்களின் மூலவேர்களையும், கடந்த காலத்தையும் தேடிக் கண்டுணர்ந்து, தங்களின் வருங்காலத்தைக் கட்டியெழுப்புமாறு பரிந்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.