2018-05-31 15:42:00

சிறார் வர்த்தகத்தைத் தடைசெய்ய திருப்பீடம்


மே,31,2018. சிறார் வர்த்தகத்தை முழுவதும் தடைசெய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட, திருப்பீடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக, திருப்பீட அதிகாரி ஒருவர், மனிதக்கூறு பற்றிய, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அவைக் கூட்டத்தில் தெரிவித்தார்.

ஆஸ்ட்ரியாவின் வியன்னாவில், இச்செவ்வாய், புதன் ஆகிய நாள்களில் OSCE எனப்படும் ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அவை நடத்திய கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார், அந்த அவையின் திருப்பீட பிரதிநிதி, பேரருள்திரு Janusz S. Urbańczyk.

மனித உரிமைகள் கல்வி, திறமைகளை வளர்த்து செயல்படுத்தும் திட்டங்கள் போன்றவை உட்பட, கல்வி வழியாக, சிறார் வர்த்தகம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய, பேரருள்திரு Urbańczyk அவர்கள், சமூகங்களுக்குள் மனித வர்த்தகத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளில், பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமிகள் ஆகிய அனைவர் மீதும் கவனம் செலுத்தப்படுமாறு கூறினார்.

மனித வர்த்தகத்தின் அனைத்து வடிவங்களையும் தடுத்து நிறுத்துவதற்கு, நிறுவனங்கள் மற்றும் நாடுகளுக்குள் ஒத்துழைப்பு ஊக்குவிக்கப்பட வேண்டுமென்பதையும், பேரருள்திரு Urbańczyk அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.