2018-06-02 14:21:00

திருத்தந்தை – ஜூன் 3ல் ஓஸ்தியாவில் திருநற்கருணை பவனி


ஜூன்,02,2018. செபத்தில் ஆண்டவரைத் தேடுங்கள், அவரே நம்மை அழைத்திருப்பவர் என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இச்சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டது.

மேலும், இத்தாலிய பொருளாதார வல்லுனரான, பேராசிரியர் Luigino Bruni, போர்த்துக்கல் நாட்டு திருப்பீடத்தூதர் பேராயர் Rino Passigato, நிகராகுவா நாட்டு திருப்பீடத்தூதர் பேராயர் Waldemar Staniskaw Sommertag, திருப்பீடத்துக்கான போஸ்னியா-எர்செகொவினா குடியரசின் தூதராகப் பணியாற்றி விடைபெறும் Slavica Karačić ஆகியோரையும், இச்சனிக்கிழமை காலையில் திருப்பீடத்தில் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்னும், கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தப் பெருவிழாவாகிய இஞ்ஞாயிறு மாலையில், உரோம் புறநகரிலுள்ள ஓஸ்தியாவில் திருப்பலி நிறைவேற்றி, திருநற்கருணை பவனியை தலைமையேற்று நடத்துவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் நகருக்கு ஏறக்குறைய 25 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கடற்கரை நகரமான ஓஸ்தியாவில், புனித மோனிக்கா ஆலய வளாகத்தில் பெருவிழா திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன்பின்னர், திருநற்கருணை பவனியையும் தலைமையேற்று நடத்துவார்.

1263ம் ஆண்டில் இத்தாலியின் Bolsenaவில் திருநற்கருணை புதுமை நடைபெற்ற பின்னர் 1264ம் ஆண்டில் திருத்தந்தை நான்காம் உர்பான் அவர்கள், கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தப் பெருவிழாவை உலக அளவில் உருவாக்கினார். அதற்கு பிறகு, இப்பெருவிழா நாளில் திருத்தந்தையர், திருநற்கருணை பவனியை, உரோம் நகரின் பல்வேறு பகுதிகளில் தலைமையேற்று நடத்திவந்தனர். புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1982ம் ஆண்டில், உரோம் இலாத்தரன் பசிலிக்கா வளாகத்திலிருந்து மேரி மேஜர் பசிலிக்கா வரை இதனை நடத்தினார். 1982ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் இவ்வாறு நடைபெற்ற இந்தப் பவனியை, இந்த 2018ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓஸ்தியாவில் நிகழ்த்தவுள்ளார். 1968ம் ஆண்டில் அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், ஓஸ்தியாவில் இப்பவனியை நடத்தியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.