2018-06-27 15:52:00

உலக அரசுகளின் கொடுமைகளுக்கு உள்ளாகும் கிறிஸ்தவர்கள்


ஜூன்,27,2018. ஈராக் நாட்டில் வாழும் கிறிஸ்தவர்கள் இவ்வளவு தூரம் துன்பங்களை சந்திப்பர் என்பதை தான் கனவிலும் எண்ணிப்பார்த்ததில்லை என்று, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தையும், புதிதாக நியமனம் பெற்றுள்ள கர்தினால்களில் ஒருவருமான லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்கள் கூறினார்.

La Croix என்ற பிரெஞ்சு நாளிதழுக்கு அண்மையில் பேட்டியளித்த முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி இரவோடிரவாக ஒரு இலட்சம் கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேற வேண்டியிருந்த துன்பத்தை குறிப்பிட்டுப் பேசினார்.

முதல் கிறிஸ்தவர்கள் உரோமையரின் வன்முறைகளுக்கு உள்ளானதுபோல், ஈராக் கிறிஸ்தவர்கள் பன்னாட்டு அரசுகளின் கொடுமைகளுக்கு உள்ளாகி வருகின்றனர் என்று முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

வர்த்தக இலாபத்தை மட்டுமே குறிவைக்கும் பன்னாட்டு அரசுகள், மக்களின் துயரங்களை குறைப்பதற்கு எவ்வகையிலும் முன்வருவதில்லை என்ற கருத்தையும் முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

ஈராக் நாட்டில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து அமைதியுடன் வாழ்வதற்குத் தேவையான சூழலை உருவாக்குவதே தன் தலையாயப் பணி என்பதை புதிய கர்தினால்களில் ஒருவரான முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.