2018-06-29 15:35:00

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், புதிய கர்தினால்கள்


ஜூன்,29,2018. எல்லாவிதமான பொருளிய மற்றும் ஆன்மீக வறுமையும், நம் சகோதரர், சகோதரிகளுக்கு எதிராக இழைக்கப்படும் எல்லா விதமான பாகுபாடும், கடவுள் மற்றும் அவரின் அன்பை நாம் புறக்கணிப்பதால் வருகின்றன என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டரில், இவ்வெள்ளிக்கிழமையன்று வெளியாயின.

மேலும், ஜூன் 28, இவ்வியாழன் மாலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 14 புதிய கர்தினால்களுக்கு, தொப்பியும், மோதிரமும் அணிவித்து பொறுப்புக்களை ஒப்படைத்த நிகழ்வுக்குப்பின், 14 புதிய கர்தினால்களுடன், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைச் சந்தித்தார்.

வத்திக்கானில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தங்கியிருக்கும், “Mater Ecclesiae” இல்லத்திற்கு இரு வாகனங்களில் சென்று, அவ்வில்லச் சிற்றாலயத்தில், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுடன் சேர்ந்து அருள் நிறைந்த மரியே செபத்தைச் செபித்தனர். பின்னர், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், எல்லாரையும் ஆசீர்வதித்தார்.

இவ்வியாழனன்று கர்தினால்கள் அவையில் இணைந்த 14 புதிய கர்தினால்களுடன், திருஅவையில் மொத்தம் 226 கர்தினால்கள் உள்ளனர். இவர்களில், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்குட்பட்டவர்கள் 125. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதுவரை 59 பேருக்கு, கர்தினால்கள் தொப்பி மற்றும் மோதிரத்தை வழங்கியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.