2018-06-30 15:46:00

பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயரின் பணி ஓய்வு ஏற்பு


ஜூன்,30,2018. தமிழகத்தின் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ஜூடு ஜெரால்டு பால்ராஜ் அவர்களின் பணி ஓய்வை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்போதைய அம்மறைமாவட்ட நிர்வாகப் பொறுப்பை, மதுரை பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்களிடம் ஒப்படைத்துள்ளார் என்று, இந்திய ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

இந்நியமனம் பற்றி, இந்திய ஆயர் பேரவை வலைத்தளத்தில், ஜூன் 29, இவ்வெள்ளிக்கிழமையன்று செய்தி வெளியிட்டுள்ள, இந்திய ஆயர் பேரவையின் பொதுச்செயலர் ஆயர் தியோடர் மஸ்கரீனஸ் அவர்கள், இந்திய திருப்பீடத் தூதரகத்திடமிருந்து இத்தகவலைப் பெற்றதாகவும், பாளையங்கோட்டை மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகி, பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்களின் பணியை அன்னை மரியிடம் அர்ப்பணிப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், ஆயர் ஜூடு பால்ராஜ் அவர்கள், பாளையங்கோட்டை மறைமாவட்டத்திற்கும், இந்தியத் திருஅவைக்கும் அர்ப்பணத்துடன் ஆற்றியுள்ள பணிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், ஆயர் அவர்களை அன்னை மரியிடம் அர்ப்பணிப்பதாகவும் கூறியுள்ளார், ஆயர் மஸ்கரீனஸ்.  

1943ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி, திருச்சி பழையகோவில் பகுதியில் பிறந்த ஆயர் ஜூடு பால்ராஜ் அவர்கள், இரண்டாயிரமாம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி, பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டு, அதே ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

ஆதாரம் : CBCI/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.